Showing posts with label sivam. Show all posts
Showing posts with label sivam. Show all posts

Wednesday, 6 July 2016

சிவம் - உருவநிலை


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


  சிவம் - உருவநிலை 

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத்தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. 
இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாடு

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்

      மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள்.
  1. சோமாஸ்கந்தர் - திருவாரூர்
  2. நடராஜர் - சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
  6. பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  7. காமசம்ஹாரர் - குறுக்கை
  8. கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
  9. சலந்தராகரர் - திருவிற்குடி
  10. திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
  11. கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  12. வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
  13. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
  14. கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
  15. கங்காளர் - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
  16. சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
  17. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
  18. சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
  19. ஏகபாதமூர்த்தி - மதுரை
  20. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
  21. சுகாசனர் - காஞ்சிபுரம்
  22. உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
  23. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
  24. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
  25. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங்களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவரமூர்த்திவகை



  • ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
  • தற்புருஷம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
  • அகோரம் - கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
  • வாமதேவம் - கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
  • சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்
  • அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், 
    வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

    சிவசக்தி

    சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

    இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.
    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
     திருச்சிற்றம்பலம்

    சிவம்

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    சிவம்

    முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

    முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள 

    அருவம், 
    அருவுருவம், 
    உருவம் 

    ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

    அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; 

    அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; 

    உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப்பர். 

    இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.

    அருவம், உருவம் மற்றும் அருவுருவம் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்திப்போம்.

     மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

    திருமுறை அருளாளர்கள் - 4

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    திருமுறை அருளாளர்கள் - 4 

    (ஒன்பதாம் திருமுறை)

    சேந்தனார்

    திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். பட்டினத்தாரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதில் உள்ள பொருள்களை அள்ளிக்கொள்ளுமாறு செய்தார். அது பொழுது பட்டினத்தாரின் சுற்றத்தார்கள் சோழ வேந்தனிடம் சென்று முறையிட்டனர். சோழமன்னன் சேந்தனாரைச் சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான்.

    மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்n
    நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திn
    செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டn
    கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.n
    -தனிப்பாடல்n
    எனப் பட்டினத்தார் இறைவனை வேண்டினார்.
    சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையினின்றும் விடுதலை பெற்றார். மனைவி மக்களுடன் தில்லையம்பதி சென்று, விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்திவந்தார். நாள்தோறும் விறகுவிற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அருத்தும் திருத் தொண்டாற்றி வந்தார்.

    ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட் டிற்கு எழுந்தருளினார். சேந்தனார் அளித்த களியாகிய உணவினை ஏற்று அதன் ஒரு பகுதியைத் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார். இதனை, 

    ``செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே`` என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.
    சேந்தனார் நடராசப் பெருமானுக்குத் தவிட்டை அமுதாக நிவேதனம் செய்தார் என்னும் செய்தியை,
    ``வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை``
    என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.
    ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழா வந்தது. நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அது கண்ட சேந்தனார் இறையருளால் திருப்பல்லாண்டு பாடி, தானே அத் தேர் ஓடி நிலைக்கு வருமாறு செய்தார். சேந்தனார் திருக்கடவூருக்கு அண்மையில் உள்ள திரு விடைக்கழி என்னும் தலத்தை அடைந்து, கந்தவேளை வழிபட்டுக் கொண்டு, அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். சேந்தனார் திருமடத்துக்கு அக்காலத்து மன்னன் நிலமளித்து உதவினன். அந்நிலப்பகுதி உள்ள இடம் சேந்தன்மங்கலம் என்று வழங்கப்பட்டது. இச்செய்தி திருவிடைக்கழி புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப் பெயருடன் இருக்கின்றது.

    இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். சேந்தன் மங்கலம் இன்று முகமதியர்களின் உறைவிடமாக உள்ளது.

    கருத்து வேற்றுமைகள்: 

    சேந்தனார் செப்புரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பாப் பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக் கிழார் கூறுவர். முதல் இராஜராஜசோழன் (கி.பி. 985 -1014) ஆட்சியில் திருவீழிமிழலைக் கோயிலில் திருநந்தாவிளக்கு வைத்த ஜயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும், திருமாளிகைத்தேவர் என்றும் கல் வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளார். ஜெயந்தன் என்ற பெயரின் திரிபே சேந்தன் என மருவிற்று என்றும், சேந்தனாரும் திருமாளிகைத் தேவ ரும் ஒருவரே என்றும் மு. இராகவஅய்யங்கார் அவர்கள் கூறுவர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம், திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் அருளிய நான்கு பதிகங்களை அடுத்து, சேந்தனார் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் மூன்றும் அமைந்திருத்தலாலும், கடைசித் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் சேந்தன் என்ற பெயர் குறிக்கப் பெற்றிருப்பதாலும் இப்பதிகங்கள் அனைத்தையும் ஒருவரே பாடியிருத்தல் கூடும் எனக் கருதுவர். இக்கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சேந்தனார், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக் கழி ஆகிய முத்தலங்களுக்கு, மூன்று திருவிசைப்பாப் பதிகங்களை யும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.

    காலம்:

    கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்

              மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
           திருச்சிற்றம்பலம் 

    Sunday, 20 March 2016

    சிவம் - உருவநிலை 3

    சிவமயம்

    திருச்சிற்றம்பலம

    சிவம் - உருவநிலை  3

    லிங்கமூர்த்தி


    லிங்கம் விளக்கம்: 

    நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

    மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

    கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.



    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

    புறச்சந்தான குரவர்கள் - 1


     திருச்சிற்றம்பலம் 


    புறச்சந்தான குரவர்கள்  - 1 
    மெய்கண்டார்

    சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதான சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.
    மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், வேளாண் குடியில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
    பிறப்பு
    திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை. அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
    சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
    "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"
    சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை, பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசிக்கலானார்கள். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
    கனவிலிருந்து விழித்துக்க் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்த கனவினை, தன மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
    இளம் பராயம்
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார். இப் பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும்.
    நூற் பணி
    தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களை தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
    அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல்
    இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
    அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
    மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
    முத்தி
    மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்


    திருச்சிற்றம்பலம் 

    Tuesday, 8 March 2016

    சிவம் - அருவநிலை

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    சிவம் - அருவநிலை

    இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாகவும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. 

    நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்குவர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் எனவும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்குவர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞானவடிவம் கொண்டது.

    நாளை முதல் சிவ உருவங்களை சிந்திப்போம்.

     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
        திருச்சிற்றம்பலம் 

    சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்

      திருச்சிற்றம்பலம் 
    சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்



    தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் இறைவன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.


    1. சந்திரசேகரம்


    சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சியளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.


    2. அர்த்தநாரீசுரம்


    ஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.


    3. சக்கரபிரதானம்


    ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.

    மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்.

    மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.


    4. தட்சிணாமூர்த்தம்


    படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.


    5. லிங்கஸ்வரூபம்


    பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.


    6. லிங்கோற்பவம்


    பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.


    7. தட்சயக்ஞ பங்கம்


    சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.


    8. சந்தத நிர்த்தனம்


    படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.


    9. சண்டே சாதுக்ரகம்


    தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.



    10. சலந்தரவதம்


    சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.


    11. அகோராஸ்திரம்


    சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.


    12. ஏகபதம்


    இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.


    13. அச்வாருடம்


    மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.


    14. சத்ய சதாசிவம்


    சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.


    15. மிக்க சதாசிவம்


    இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.


    16. தகுல குளேசுவரம்


    உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.


    17. சகஜ சுகாசனம்


    ஆறு திருக்கரத்துடன் பார்வதிதேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.


    18. கூர்ம சங்காரம்

    பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.


    19. மச்சாரி


    சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினார். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.



    20. வராஹரி


    மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.


    21. சற்குரு மூர்த்தம்


    மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.


    22. உமேசம்


    பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.


    23. உமாபதி


    சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.


    24. ஐயபுஜங்கத்ராசம்


    பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.


    25. சார்த்தூரஹரி


    மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.


    26. பைரவம்


    அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.


    27. கல்யாணசுந்தரம்


    தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.


    28. வடுகம்


    துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.


    29. கிராதம்


    அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.



    30. சுந்தர விருஷப ஊர்தி


    சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.


    31. விஷாபஹரணம்


    பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.


    32. சுவராபக்ஞம்


    தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.


    33. துகளறு க்ஷேத்திரபாலகம்


    பிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.


    34. தொல்கருடாந்திகம்


    சிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.


    35. முகலிங்கம்


    சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.


    36. துங்க கங்காதரம்


    கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.


    37. கங்கா விசர்ஜனம்


    பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் கங்கா விசர்ஜனம்.


    38. சுப சோமஸ்கந்தம்


    சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.


    39. சூரசிம்ஹாரி


    மகவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.

    40. கமாரி


    சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.


    41. யமாந்தகம்


    பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.


    42. சசி மாணவபாவம்


    பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணித் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெறச் செய்து உலகிற்கெல்லாம் ஆசான் என்ற தத்துவம் உணர்த்திய கோலம் சசி மாணவபாவம்.


    43. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்


    தாருக வனத்தில் கையில் தட்டுடன் ஐயன் வந்த போது மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணு தம்மை ஆட்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். வேறொரு சமயம் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோலம் சுபகர பிரார்த்தனை மூர்த்தம்.


    44. நறுந்திர புராந்தகம்


    சினம் கொண்ட சிவன் முப்புரத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய சூரிய கோலம் நறுந்திர புராந்தகம்.


    45. சுரர் பரசும் சுமுக கங்காளம்


    கங்காளம் என்பதனை அணிகலனாய் அணிந்த திருக்கோலம் சுரர் பரசும் சுமுக கங்காளம்.


    46. ரத்தப் பிட்சைப் பிரதானம்


    ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கொய்து அந்தத் தலை ஓட்டில் எல்லா தேவர்களின் ரத்தத்தினையும் பிட்சையாக ஏற்ற கோலம் ரத்தப் பிட்சைப் பிரதானம்.


    47. இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்


    இவ்வுலகை காத்திட பார்வதி தேவியை ஜோதிமயமான பேரொளியுடன் கூடிய கௌரியாக அவதரிக்க வேண்டி அவருக்கு வரமளித்த கோலம் இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்.


    48. மஹாபாசுபர சொரூபம்


    அர்ச்சுனனின் தவத்தில் மகிழ்ந்து அவருக்குத் தம் பாசுபத படைதனை தந்தருளியக் கோலம் மஹாபாசுபர சொரூபம்.


    49. அணிதோன்று புஜங்கலளிதம்


    கருடனுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாயிருந்த பாம்புகளை அழைத்து அதன் அச்சம் அகற்றித் தன் திருமேனியில் அணிஅந்த கோலம் அணிதோன்று புஜங்கலளிதம்.



    50. ரிஷிபாந்திகம்


    விஷ்ணுவை ரிஷப வாகனமாக்கிட அதன் மீதமர்ந்து காட்சியளித்த கோலம் ரிஷிபாந்திகம்.


    51. தோமறுகஜயுத்தம்


    தேவர்களை துன்பத்துக்குள்ளாக்கிய கஜாசுரனைக் காசி க்ஷேத்திரத்தில் சம்ஹாரம் செய்து, அந்த யானைத் தோலை உரித்து ஆடையாக்கிக் காட்சி அளித்த கோலம் தோமறுகஜயுத்தம்.


    52. விந்தை விளம்பு கஜாந்திகம்


    அசுரன் சூபரத்மனின் மகன் பானுகோபன். அவனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர்புரிந்து ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது. அது திருவெண்காடு சென்று சிவனை வணங்க அதன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் விந்தை விளம்பு கஜாந்திகம்.


    53. வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்


    வீணையின் பெருமையை உலகிற்குக் கூற வீணையைக் கையிலேந்திய கோலம் வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்.


    54. மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்


    யோகத்தின் பெருமையை உணர்த்திய கோலம் மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்.


    55. விமல பிட்சாடனம்


    தாருக வனத்தில் திருவோட்டினைக் கையிலேந்திய திருக்கோலம் விமல பிட்சாடனம்.


    56. கவலை யுத்தாரணம்


    ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.


    57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்


    பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.


    58. கவுரி விலாசமந்விதம்


    பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.


    59. எழிலரியர்த்தம்


    மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.




    60. வீரபத்திரம்


    வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.


    61. திரிமூர்த்தி முப்பாதம்


    பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.


    62. மகாவேதாளி நடம்


    கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.


    63. வெருவரு மேகபதத்திருவரு


    பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.


    64. சிவலிங்கம்


    ஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.

    சிவபெருமானின் அறுபத்து நான்கு திருக்கோலங்களில் எதைத் தரிசித்தாலும் பயனுண்டாம்.

              மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
           திருச்சிற்றம்பலம்