Wednesday 6 July 2016

சிவம் - உருவநிலை 1


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிவம் - உருவநிலை  1

சேயிடைச் செல்வர் (சோமாசுகந்தர்)




சேயிடைச் செல்வர் என்பது சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று. சிவனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் சிறு குழந்தையாக முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலமேசோமாசுகந்தர் வடிவம் எனப்படும்.
சூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சசிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க சிவபெருமான் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள்.
ஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சேயிடைச் செல்வர் என்று அழைக்கின்றார்கள்.
திருவாரூர் தியாகராச சுவாமி கோயில்,
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில்,
குமரக்கோட்டம்,
காமாட்சியம்மன் கோயில்,
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
உள்ளிட்ட பல தலங்களில் சோமாசுகந்தர் வடிவத்தை தரிசிக்கலாம்
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

சிவம் - உருவநிலை


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


  சிவம் - உருவநிலை 

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத்தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. 
இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாடு

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்

      மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள்.
  1. சோமாஸ்கந்தர் - திருவாரூர்
  2. நடராஜர் - சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
  6. பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  7. காமசம்ஹாரர் - குறுக்கை
  8. கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
  9. சலந்தராகரர் - திருவிற்குடி
  10. திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
  11. கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  12. வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
  13. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
  14. கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
  15. கங்காளர் - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
  16. சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
  17. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
  18. சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
  19. ஏகபாதமூர்த்தி - மதுரை
  20. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
  21. சுகாசனர் - காஞ்சிபுரம்
  22. உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
  23. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
  24. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
  25. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங்களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவரமூர்த்திவகை



  • ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
  • தற்புருஷம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
  • அகோரம் - கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
  • வாமதேவம் - கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
  • சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்
  • அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், 
    வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

    சிவசக்தி

    சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

    இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.
    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
     திருச்சிற்றம்பலம்

    சிவம்

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    சிவம்

    முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

    முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள 

    அருவம், 
    அருவுருவம், 
    உருவம் 

    ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

    அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; 

    அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; 

    உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப்பர். 

    இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.

    அருவம், உருவம் மற்றும் அருவுருவம் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்திப்போம்.

     மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

    திருமுறை அருளாளர்கள் - 4

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    திருமுறை அருளாளர்கள் - 4 

    (ஒன்பதாம் திருமுறை)

    சேந்தனார்

    திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். பட்டினத்தாரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதில் உள்ள பொருள்களை அள்ளிக்கொள்ளுமாறு செய்தார். அது பொழுது பட்டினத்தாரின் சுற்றத்தார்கள் சோழ வேந்தனிடம் சென்று முறையிட்டனர். சோழமன்னன் சேந்தனாரைச் சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான்.

    மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்n
    நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திn
    செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டn
    கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.n
    -தனிப்பாடல்n
    எனப் பட்டினத்தார் இறைவனை வேண்டினார்.
    சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையினின்றும் விடுதலை பெற்றார். மனைவி மக்களுடன் தில்லையம்பதி சென்று, விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்திவந்தார். நாள்தோறும் விறகுவிற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அருத்தும் திருத் தொண்டாற்றி வந்தார்.

    ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட் டிற்கு எழுந்தருளினார். சேந்தனார் அளித்த களியாகிய உணவினை ஏற்று அதன் ஒரு பகுதியைத் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார். இதனை, 

    ``செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே`` என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.
    சேந்தனார் நடராசப் பெருமானுக்குத் தவிட்டை அமுதாக நிவேதனம் செய்தார் என்னும் செய்தியை,
    ``வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை``
    என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.
    ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழா வந்தது. நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அது கண்ட சேந்தனார் இறையருளால் திருப்பல்லாண்டு பாடி, தானே அத் தேர் ஓடி நிலைக்கு வருமாறு செய்தார். சேந்தனார் திருக்கடவூருக்கு அண்மையில் உள்ள திரு விடைக்கழி என்னும் தலத்தை அடைந்து, கந்தவேளை வழிபட்டுக் கொண்டு, அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். சேந்தனார் திருமடத்துக்கு அக்காலத்து மன்னன் நிலமளித்து உதவினன். அந்நிலப்பகுதி உள்ள இடம் சேந்தன்மங்கலம் என்று வழங்கப்பட்டது. இச்செய்தி திருவிடைக்கழி புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப் பெயருடன் இருக்கின்றது.

    இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். சேந்தன் மங்கலம் இன்று முகமதியர்களின் உறைவிடமாக உள்ளது.

    கருத்து வேற்றுமைகள்: 

    சேந்தனார் செப்புரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பாப் பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக் கிழார் கூறுவர். முதல் இராஜராஜசோழன் (கி.பி. 985 -1014) ஆட்சியில் திருவீழிமிழலைக் கோயிலில் திருநந்தாவிளக்கு வைத்த ஜயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும், திருமாளிகைத்தேவர் என்றும் கல் வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளார். ஜெயந்தன் என்ற பெயரின் திரிபே சேந்தன் என மருவிற்று என்றும், சேந்தனாரும் திருமாளிகைத் தேவ ரும் ஒருவரே என்றும் மு. இராகவஅய்யங்கார் அவர்கள் கூறுவர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம், திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் அருளிய நான்கு பதிகங்களை அடுத்து, சேந்தனார் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் மூன்றும் அமைந்திருத்தலாலும், கடைசித் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் சேந்தன் என்ற பெயர் குறிக்கப் பெற்றிருப்பதாலும் இப்பதிகங்கள் அனைத்தையும் ஒருவரே பாடியிருத்தல் கூடும் எனக் கருதுவர். இக்கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சேந்தனார், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக் கழி ஆகிய முத்தலங்களுக்கு, மூன்று திருவிசைப்பாப் பதிகங்களை யும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.

    காலம்:

    கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்

              மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
           திருச்சிற்றம்பலம் 

    அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்
    அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

    திருநந்திதேவர்



    நம்பிரான் திருமூலரின் திருமந்திரதில் இருந்து நாம் நந்தி பெருமானை பற்றி நன்கு உணரலாம்.

    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

    நந்தியெம் பெருமான்பால் அவர்தம் திருவருட்டுணையால் பொருள்மறை கேட்டுப் போற்றி யொழுகும் மெய்கண்டார் நால்வராவர். மெய்கண்டார் - மாணவர். அவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ப. சிவயோக மாமுனிவர், பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால் முனிவர், வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் ஆகிய மூவர். தன்னொடுங் கூட்டி எண்மர் என்றனர். நாதர் - செந்நெறிமுதல்வர்; சித்தாந்த ஆசிரியர்.

    நந்திகள் நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். மன்று தொழுத பதஞ்சலி - தில்லையில் நடம் கண்ட பதஞ்சலி முனிவர்.

    நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்
    நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

    தன்னை முழுமுதற் சிவனாம் தலைவற்கு அடிமையாக ஒப்புவித்தவர் அத் திருவருளால் நாதன் எனப்படுவர். அச் சிறப்புப் பெயரே பெயராக அழைக்கவும்படுவர். அந் நந்தியின் அருளாலே ஆ மேய்க்கும் மூலன் திருவுருவின்கண் புகுந்தேன். நந்தி அருளாவது நாட்டினில் என்செயுமெனின்? நந்தி வழிகாட்டவே நானிருந்து முந்திய தொண்டெலாம் முயல்கின்றேன். நந்தி - ஆலமர் செல்வன். வழிகாட்ட - சித்தாந்த நெறிகாட்ட. அடிமையாயினார்க்கு நந்தியருள் எல்லாம் இனிதினியற்றும் என்க.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

    "செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
    நம் பவமறுத்த நந்திவானவர்"

    எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    அதிகார நந்தி

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

    அதிகார நந்தியும் கருடரும்

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார் என்பது ஐதீகம். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    நந்திஎம்பெருமானை தவிர்த்து ஏனையோர்களை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கபெற வில்லை. அடியார்கள் யாரேனும் அனைவருக்கும் உணர்த்தலாம் 

     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
        திருச்சிற்றம்பலம் 

    அகச்சந்தான குரவர்கள்


    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    அகச்சந்தான குரவர்கள்


    அகச்சந்தான குரவர்கள் என அழைக்கப்படும் நான்கு குருமார்களும் கயிலாயத்தில் வாழும் கயிலாய பரம்பரையினர் ஆவார். எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய நம்பெருமான் ஈசனே சிவாகமத்தை நேரடியாகத் திருநந்திதேவர் அவர்களுக்கு உபதேசித்து அருளியவர். 

    "நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
    அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
    அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
    புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
    - காஞ்சிப் புராணம்

                       1. திருநந்திதேவர்



                       2. சனற்குமாரர்


                       3. சத்தியஞான தரிசினிகள்

                       4. பரஞ்சோதியார் 




    நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம்

    Monday 28 March 2016

    திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி )

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்
               திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி ) 
    (ஒன்பதாம் திருமுறை

    திருமாளிகைத் தேவர்


    திருவாவடுதுறை - நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த போக ருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரி யோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.

    ``போகர் திருமாளிகைத் தேவருக்கு நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூசைசெய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூசித்த நிர்மாலியத்தைக் கருவூர்த் தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூசித்த நிர்மாலியத்தைத் திரு மாளிகைத்தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச் சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர்,` திருமாளிகைத் தேவர் செய்ததே சரி` என்று கூறி `இறைவனைப் பூசிக்கின்ற பூசையே மிகச்சிறந்தது; அவர், நீர் தந்த பூசைப்பொருள்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை`, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாத ருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத் தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார்.

    ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து `இதனைப் பூசித்துக்கொண்டு இத்திருவாவடு துறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக` என ஆணை தந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென் றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி,

    திருக்கூட்டச் சிறப்பினொடும் செபந்தவந்தியானம் நிட்டை
    உருக்கமோ டிருந்துசெய்தற் காகுநல் லிடமா யோங்கும்
    பொருப்புறழ் விமானக்கோயில் அருகு தென்புறத்தின் மேவ
    அருத்தியி னொடுமிக் கான திருமட மொன்றுண் டாக்கி.
    -திருவாவடுதுறைப் புராணம்

    தேசிகர் பணித்த வண்ணம் செய்கை தப்பாமல் பேணி
    மாசிலா மணிபொற் பாதம் நாடொறும் வணங்கி மிக்க
    நேசமொ டாசான் செம்பொன் திருவடி நேர்வைத்தர்ச்சித்
    தாசையொ டடியார் கூட்டத்துடன் கலந்தமர்ந் தெந்நாளும்``
    -திருவாவடுதுறைப் புராணம்

    நவகோடி சித்தர்க்கெல்லா மிடங்கள் நன்கமையப் பண்ணி சிவசமயத்தை நாளும் வளர்த்து நற்செய்கையோடும்

    தவமலி நீற்றின் சார்பு உழைத்திடச் சமாதி யோகம்
    உவகையொடியற்றி மூல எழுத்தைந்து மோதி.
    -திருவாவடுதுறைப் புராணம்

    அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார்.

    ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடு துறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார்.

    திருமாளிகைத்தேவர் ஒரு நாள் காவிரியில் நீராடி, பூசைக் குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்துகொண்டிருந்தார். எதிரே பிணப்பறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச் செல்வ தற்கும் இடமில்லை. பூசைசெய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்கருதி, திருமஞ்சனக்குடம் முதலிய வற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச் செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத் திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித் தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

    திருமாளிகைத்தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.

    அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து, தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந் தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச்சேனைகளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படைதொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில் நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார். அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார்; அரசன் அருள் பெற்றுச் சென்றான்.

    திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது.

    இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.

    அற்புதங்கள்:

    திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச் செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்த காலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார். இன்னோரன்ன அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து, தொட்டிக்கலை ஷ்ரீ சுப்பிரமணிய முனிவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

    குடங்கர் விசும் பிடைநிறுவிக் குணபம் நடந்
    திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர்
    வடங்கழற்றி ஓட்டிமதில் நந்திகளை
    வர வழைத்து வரைநன் காட்டின்
    உடம்பின்எழு புகைமாற்றிக் கொங்கணர்பாத்
    திரம்சுவற்றி உணவ தாய் வெந்
    திடும்பயறு முளைசெய்தெமக்(கு) அருள்திருமா ளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி.
    -தனிப்பாடல்

    திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும். ஷ்ரீ கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேசுவர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இம்மரபை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தனிப்பாடலால் நாம் நன்கு அறியலாம்.

    பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன் வீசுகழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
    வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
    கருதுபந்தி யாதல்வழக் கம்.
    -தனிப்பாடல்

    திருப்பதிகங்கள்:

    திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெரு மானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப் பதிகங்கள் நான்கு ஆகும்.

    காலம்:

    தஞ்சையில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திரு விசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

              மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
     திருச்சிற்றம்பலம் 
      

    திருமுறை அருளாளர்கள் - 3

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    திருமுறை அருளாளர்கள் - 3

    திருமுறை அருளாளர்கள் இருபத்தி எழுவரில் முதல் 8 திருமுறைகளை அருளியர்வர்கள் சமயகுரவர்களாகிய,

    திருஞானசம்பந்தர் (திருக்கடைக்காப்பு  எனப்போற்றப்படும்முதல்  மூன்று திருமுறைகள்),

    திருநாவுக்கரசர் ( தேவாரம் எனப்போற்றப்படும் 4,5,6 வது திருமுறைகள்  ),

    தம்பிரான் தோழனாகிய சுந்தரர் (திருப்பாட்டு எனப்போற்றப்படும் 7 வது திருமுறை),

    திருவாதவூராகிய மாணிக்கவாசகர் (தெய்வ திருவாசகமும் அருள்திரு திருக்கோவையார் 
    ஆகியவையும் 8 ஆம் திருமுறை) 

    ஆகியோரின் அருள் சரிதங்களையும் அற்புதங்களையும் நாம் முந்தைய பதிவுகளில் சிந்தனை செய்துள்ளோம். 

    திருமுறைகளை தொகுத்து வழங்கிய தமிழ் வேத வியாசர் என போற்றப்படும் நம்பியாண்டார் நம்பி மற்றும் நமக்கெல்லாம் அடியார்களின் பெருமைகளை விவரித்து கூறி பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை அருளிய தெய்வ சேக்கிழார் பற்றியும் முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம். 

    இனி திருமுறை வாரியாக ஒவ்வொருவராக சிந்தனை செய்வோம்.  

    ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு அருளிய ஒன்பது அருளாலர்களில்,
    1. திருமாளிகைத் தேவர்,
    2. சேந்தனார்,கருவூர்த் 
    3. தேவர்,பூந்துருத்தி 
    4. நம்பிகாடநம்பி,
    5. கண்டராதித்தர்,
    6. வேணாட்டடிகள்,
    7. திருவாலியமுதனார்,
    8. புருடோத்தம நம்பி,
    9. சேதிராயர்


     நாம் முதலில் சிந்திக்க இருப்பது திருமாளிகைத் தேவர்.
             
     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
        திருச்சிற்றம்பலம் 
      

    திருமுறை அருளாளர்கள் - 2

    திருச்சிற்றம்பலம் 
    திருமுறை அருளாளர்கள் - 2

    தெய்வ சேக்கிழார்  


    தெய்வ சேக்கிழார்  என்று சொல்லும்போதே உடலும் உள்ளமும் உருகி இரு கை கூப்பி தொழுகிறது, அடியார்களின் பெருமையும் ஈசனினின் அருளும் உள்ளூர பெருகி கடை விழியோரம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உலகாளும் நாயகனே உலகெலாம் என எடுத்து கொடுத்த அருளினை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

    உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

    இளமைப் பருவம்

    கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
    சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழனின் என்ற அநபாயசோழருக்கு 

    கடலினும் பெரியது எது 

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது

    உலகினும் பெரியது எது

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

    மலையினும் பெரியது 

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது

    என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

    அமைச்சர் பணி

    இரண்டாம் குலோத்துங்க சோழன் கேளிக்கைகளில் மனதினை செலுத்தி், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
    மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார்.

    திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

    பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார். ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
    அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

    இயற்றியுள்ள நூல்கள்
    1. பெரிய புராணம்(உலகெலாம் என தொடங்கி, உலகெலாம் என முடிக்க பெற்ற சிறப்புடைய நூல்)
    2. திருத்தொண்டர் புராணச் சாரம்
    3. திருப்பதிகக்கோவை 

    என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்
             
     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

        திருச்சிற்றம்பலம் 

    திருமுறை அருளாளர்கள் - 1

    திருச்சிற்றம்பலம்

    திருமுறை அருளாளர்கள் - 1

    நம்பியாண்டார் நம்பி



    27 திருமுறை அருளாளர்களை பற்றி சிந்திக்கும் போது நாம் முதலில் வணங்க வேண்டியவர் பொல்லா பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பி ஆண்டார் நம்பி. இவர்தான் பிள்ளையாரின் அருளால் ஈசனருள் மிக்க திருமுறைகளை கண்டறிந்து தொகுத்து கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க நம்பி அடிகளாரின் பாதம் பணிந்து திருமுறை அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம். 

    நாம் முதலில் சிந்திக்க இருப்பது - நம்பியாண்டார் நம்பி.
    நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்,திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.கிடைத்தற்கரிய அரும்பெரும் பொக்கிசங்களான திருமுறைகளை பொல்லா பிளையாரின் அருளோடு நமக்கு தொகுத்து வழங்கிய மாபெரும் அருளாளர். 
    இளமையும் பொல்லா பிள்ளையாரின் அருளும்:
    நம்பி இளமையிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள தொடங்கினர், ஒருமுறை தமது தந்தையார் வெளியாருக்கு சென்று விட்டதால் பொல்லா பிள்ளையாருக்கு பூஜையும் நெய்வேத்திய அமுதும் படைத்தது பிள்ளையாரை அமுதுண்ணும்படி  வேண்டினார்  ஆனால் பிள்ளையார் அமுதுண்ணவில்லை. தந்தை கொடுத்தால்தான் பிள்ளையார் அமுது  உண்ணுவார் எனவும் தன்னுடைய பக்தியில் குறை இருப்பதால்தான்  அமுது  உண்ண மறுக்கிறார் என அழுகொண்டே தனது தலையை பிள்ளையாரின் பாதத்தில் மூட்ட ஆரம்பித்தார். 
    கருணை கடவுளானா ஆலால கண்டனின் புத்திரனான ஆணைமுகன் இந்த சிறு பிள்ளையின் பக்தியையும் தூய உள்ளதையும் அனைவரும் அறியும்படி அமுது உண்டு அருள் செய்தார்.  மேலும் இந்த குழந்தைக்கு வேதம் ஆகமங்களின் ஞானத்தினையும் அருள் செய்தார்.
    திருமுறைகளை தொகுத்தல் :
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது,
    நம்பி ஆண்டார்  நம்பிகளின் பெருமைகளை கேள்வியுற்ற இராஜராஜ  சோழன், இவரிடம் வேண்டி பிள்ளையாரின் அருளால், சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
    திருத்தொண்டர் திருவந்தாதி:
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம்திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
    11 ஆம் திருமுறைகளின் ஆசிரியர்களில் நம்பியும் ஒருவர் ஆவார்.11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, 
    • திரு இரட்டை மணிமாலை, 
    • கோயில் திருபண்ணியர் விருத்தம், 
    • திருத்தொண்டர் திரு அந்தாதி, 
    • ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, 
    • திரு சண்பை விருத்தம், 
    • திருமும்மணிக்கோவை, 
    • திரு உலாமாலை, திருக்கலம்பகம், 
    • திருத்தொகை, 
    • திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை 

    ஆகியன வாகும்
    இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரவலாக காணலாம்.

              மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
         திருச்சிற்றம்பலம்