Monday 28 March 2016

திருமுறை அருளாளர்கள் - 1

திருச்சிற்றம்பலம்

திருமுறை அருளாளர்கள் - 1

நம்பியாண்டார் நம்பி



27 திருமுறை அருளாளர்களை பற்றி சிந்திக்கும் போது நாம் முதலில் வணங்க வேண்டியவர் பொல்லா பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பி ஆண்டார் நம்பி. இவர்தான் பிள்ளையாரின் அருளால் ஈசனருள் மிக்க திருமுறைகளை கண்டறிந்து தொகுத்து கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க நம்பி அடிகளாரின் பாதம் பணிந்து திருமுறை அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம். 

நாம் முதலில் சிந்திக்க இருப்பது - நம்பியாண்டார் நம்பி.
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்,திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.கிடைத்தற்கரிய அரும்பெரும் பொக்கிசங்களான திருமுறைகளை பொல்லா பிளையாரின் அருளோடு நமக்கு தொகுத்து வழங்கிய மாபெரும் அருளாளர். 
இளமையும் பொல்லா பிள்ளையாரின் அருளும்:
நம்பி இளமையிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள தொடங்கினர், ஒருமுறை தமது தந்தையார் வெளியாருக்கு சென்று விட்டதால் பொல்லா பிள்ளையாருக்கு பூஜையும் நெய்வேத்திய அமுதும் படைத்தது பிள்ளையாரை அமுதுண்ணும்படி  வேண்டினார்  ஆனால் பிள்ளையார் அமுதுண்ணவில்லை. தந்தை கொடுத்தால்தான் பிள்ளையார் அமுது  உண்ணுவார் எனவும் தன்னுடைய பக்தியில் குறை இருப்பதால்தான்  அமுது  உண்ண மறுக்கிறார் என அழுகொண்டே தனது தலையை பிள்ளையாரின் பாதத்தில் மூட்ட ஆரம்பித்தார். 
கருணை கடவுளானா ஆலால கண்டனின் புத்திரனான ஆணைமுகன் இந்த சிறு பிள்ளையின் பக்தியையும் தூய உள்ளதையும் அனைவரும் அறியும்படி அமுது உண்டு அருள் செய்தார்.  மேலும் இந்த குழந்தைக்கு வேதம் ஆகமங்களின் ஞானத்தினையும் அருள் செய்தார்.
திருமுறைகளை தொகுத்தல் :
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது,
நம்பி ஆண்டார்  நம்பிகளின் பெருமைகளை கேள்வியுற்ற இராஜராஜ  சோழன், இவரிடம் வேண்டி பிள்ளையாரின் அருளால், சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருத்தொண்டர் திருவந்தாதி:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம்திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
11 ஆம் திருமுறைகளின் ஆசிரியர்களில் நம்பியும் ஒருவர் ஆவார்.11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, 
  • திரு இரட்டை மணிமாலை, 
  • கோயில் திருபண்ணியர் விருத்தம், 
  • திருத்தொண்டர் திரு அந்தாதி, 
  • ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, 
  • திரு சண்பை விருத்தம், 
  • திருமும்மணிக்கோவை, 
  • திரு உலாமாலை, திருக்கலம்பகம், 
  • திருத்தொகை, 
  • திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை 

ஆகியன வாகும்
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரவலாக காணலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
     திருச்சிற்றம்பலம் 
  

No comments:

Post a Comment