Sunday 6 March 2016

சைவ சமயமும் சைவ(சிவ) வழிபாடும்

சிவமயம்
திருச்சிற்றம்பலம் 


சைவ சமயமும் சைவ(சிவ) வழிபாடும்

சைவ சமயமே சமயம்,
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை,
அதில் சார் சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை.
சைவமும் சிவமும் வேறொன்றில்லை 

உலகின் மிக பழமையான யூத மதம் தோன்றியது கிமு 1000 - 1500 ஆனால் வரலாற்று ஆசிரியர்களால் கூட சைவ சமயத்தின் தோற்றத்தினை வரையறுக்க இயலவில்லை எனில் சைவத்தின் தொன்மைதான் என்னே! 

சைவ சமயம் என்றுதான் நாம் குறிப்பிடுகிறோம், சமயம் என்பதற்கு நன்கு சமைக்க படுத்தல் என்று பொருள். ஆம் கருணை கடவுளாகிய நம் பெருமான் அணைத்து உயிர்களையும் (ஆன்மாக்களை) பக்குவபடுத்தி சிவமாக்குகிறார் (மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை குறிப்பது ஆகையால்தான் நாம் சைவத்தை சமயம் என்கிறோம்).

இத்துணை தொன்மையான நம் சைவ சமயம் காலத்தின் கட்டயத்தால் பேரழிவுகளால் நிலைகுலைந்தது. இத்தகைய சூழ்நிலைகளில் தான் மற்றைய வெற்று கொள்கையுடை சமணமும் பௌத்தமும் மற்றும் ஏனைய பிற சிறு தெய்வ வழிபாடுகளும் தலை தூக்கியது. மீண்டும் கிபி 6 ஆம் நூற்றண்டுடிற்கு பிறகு சைவ நெறி வீறு கொண்டு கூத்த பெருமானின் அருளால் தழைத்தோங்கியது. ஈசன் அருளால் சைவம்  மீண்டும் தழைத்து சிறக்க ஆளுடைய பிள்ளையாரும்(திருஞானசம்பந்தரும்) ஆளுடைய அரசுமே (அப்பர்) காரணம் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டு ). ஆகையால் இவர்கள் இருவரும் சைவத்தின் இரு புண்ணிய கண்கள் ஆவார்கள். கிபி 600 - 1200 வரை சைவத்தின் பொற்காலம் என போற்றபடுகிறது.

தம்பிரான் தோழனாகிய சுந்தர மூர்த்தி அவதரித்த காலகட்டத்தில் (7 ஆம் நூற்றாண்டு இறுதி) சைவ நெறி எங்கும் பரவி இருந்தது. மேலும் சிவ அடியார்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்த இறைவடிவம் தங்கி வந்தவர் நம்பி ஆருரார் என்னும் சுந்தரர்.

ஞான குருவாகிய இம்மூவரும் இறைவனை போற்றி புகழ்ந்து செய்த தமிழ் இசை பாமாலைகள் தான் தேவாரம், ஒருமுறை இதன் சுவையை உணர்ந்து விட்டால் எல்லாம் நம் வசமாகும், ஆடல் நாயகனால் எல்லாம் சாத்தியமாகும்.

மேலும் சைவத்தின் ஒரு மணி மகுடமாக தோன்றியவர்தான் தில்லை நாயகனே மாணிக்க வாசக என அழைத்த திருவாதவூர் அடிகளார். வாதவூரரின் சிவ நெறியினை யாராலும் விவரிக்க இயலாது ஆகையால் தான் பெரும்பாலான சான்றோர்களும் அடியார்களும் திருவாசகத்துக்கு உரை எழுதவில்லை எனெனில் அதை நாம் ஆள் மனதில் நிறைத்து சித்தமெல்லாம் சிவமாக வேண்டும். தேனினும் சுவை மிகுந்த ஊனினை உருக்கும் உலப்பரிய ஆனந்த பொக்கிஷம் தான் திருவாசகம். 

இந்நால்வர்  பெருமானும் சமய குரவர்கள் என போற்றி வணங்க படுகிறார்கள்.

நால்வர் காட்டிய சைவ நெறியில் எண்ணற்ற அடியவர்கள் தோன்றி ஆலால கண்டனை போற்றி அருளி செய்தவைகள் தான் பன்னிரு திருமுறைகள் (இத்தகைய அருளார்களை நாம் மற்றொரு பதிவில் சிந்தித்து வருகிறோம்). 

தினமும் திருமுறைகளை ஓதுவோம் அரனருள் பெறுவோம் 

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
  திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment