Saturday 5 March 2016

மும்மலம்

  சிவமயம்
திருச்சிற்றம்பலம்
மும்மலம் 

ஆணவம், கன்மம், மாயை இவையே மும்மலங்கள் ஆகும்

ஆணவம்

மலங்களுள் முதன்மையானது ஆணவ மலம். இதனால் இது மூல மலம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. தமிழ் நூல்களில் இது ''இருள்'' என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல்; இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவசித்தாந்தம்.

கன்மம்

கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை ''வினை'' என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினைஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். வினைகளிலும் மூன்று வகை உண்டு. இவை:
பழவினை (சஞ்சிதம்)
நுகர்வினை (பிராரத்தம்)
ஏறுவினை (ஆகாமியம்)

என்பனவாம். இவற்றுள், ''பழவினை'' என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகு ''நுகர்வினை'', அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். ''ஏறுவினை'' என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும்.

மாயை

மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் சுவாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.
மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம்.

மாயையும், தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவற்றை நமது சைவ சிந்தாந்தத்தில் நெல் மற்றும் உமியை வைத்து மிக அழகாக விளக்கியுள்ளார்கள் நமது அருளாளர்கள்.

ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது,
கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது,
மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி - எனவே நம் ஈசனின் அருளை பெற வேண்டும் அதற்கு சிவத்தையே எப்போதும் சிந்திக்க வேண்டும். சிவ அன்பில் என்புருக பக்தி செய்ய வேண்டும்.நம் ஈசன் ஜீவனையும் சிவமாக்கும் மாபெரும் கருனைகடல். எனவே 

சிவதொண்டு செய்வோம், 
அடியாருக்கு தொண்டு செய்வோம், 
அவனருள் பெற்று பாச வினையருப்போம்.

சிவபெருமான் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர். 
சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர்.
  
  மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

                                            

No comments:

Post a Comment